"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்" (யோவா. 14:1).
இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம், "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக" என்பதாகும். ஆம், மனம் கலங்குவது மனித இயல்பு. அதிலும் பிரச்சனைகளிலும், போராட்டங்களிலும் உள்ளம் அதிகமாகவே கலங்குகிறது. "ஐயோ, என் தேவைகள் சந்திக்கப்பட வேண்டுமே, என் வியாதிகள் குணமாக வேண்டுமே, பணப் பிரச்சனை ஒழிந்துபோக வேண்டுமே, பிள்ளைகளுடைய படிப்பு ஆசீர்வாதமாயிருக்க வேண்டுமே" என்று சொல்லி, பல வேளைகளில் கலங்கியிருக்கிறோம்.
"கடன்பட்டார் நெஞ்சம்போல, கலங்கினான் இலங்கை வேந்தன்" என்பது பழமொழி. கடனினால் கலக்கம் வந்துவிடும். பிசாசு அந்தக் கலக்கத்தைப் பயன் படுத்தி, "உன்னால் இந்தப் பிரச்சனைகளை தீர்க்கவே முடியாது. தற்கொலை செய்துகொள். இந்தப் பணப்பற்றாக்குறையை எப்படி சந்திக்கப்போகிறாய்? குறுக்கு வழியில் பணத்தை தேடிக்கொள். லஞ்சம் வாங்கு" என்பான்.
உங்களுடைய இருதயம் கலங்கும்போது, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். கிறிஸ்துவிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்கிறார் இயேசு! சிந்தித்துப்பாருங்கள்! பிதாவானவர், தன்னுடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல், அவரைத் தந்து விட்டாரே. அப்படி இருக்கும்போது, மற்ற எல்லாவற்றையும், உங்களுக்கு அருளிச் செய்யாதிருப்பது எப்படி? ஆம், வானத்தையும், பூமியையும் படைத்தவர், உங்களுடைய கர்த்தராய் இருக்கிறார். பூமியும், குடிகளும் கர்த்தருடையவைகள். சமுத்திரமும், அதன் நிறைவும் கர்த்தருடையவைகள். பூமிக்கு அடியிலே அவ்வளவு தங்கச் சுரங்கங்களையும், வைரச் சுரங்கங்களையும் வைத்திருக்கிறவர், உங்கள்மேல் பாசமுள்ள, அன்புள்ள தகப்பனாய் இருக்கிறார். அவர் அற்புதமான விதத்தில், உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்.
ஆகவே, கலக்கத்துக்கு இடங்கொடுத்து மன அமைதியையும், குடும்ப சமாதானத்தையும் இழந்துவிடாதிருங்கள். என்னதான் கலக்கம் உங்களுடைய உள்ளத்தில் அலை மோதினாலும், "கடலையும், காற்றையும் அதட்டி, இரையாதே அமைதலாயிரு" என்று சொன்னவர், இன்றைக்கு உங்களுக்கு அற்புதம் செய்வார்.
முதலாவது, கர்த்தரைத் துதியுங்கள். இயேசு கிறிஸ்துவினிடத்திலே விசுவாசமாய் இருங்கள். இரண்டாவது, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, அவர் என்ன சொல்லுகிறாரோ, என்று அறியும்படி காத்திருங்கள். தாவீது ராஜா சொல்லுகிறார், "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்" (சங். 43:5).
இதுவரை, நீங்கள் மனுஷரிடத்தில் காத்திருந்திருக்கலாம். வக்கீலிடமும், போலீஸ் அதிகாரி வீட்டிலும் காத்திருந்திருக்கலாம். ஆனால், கர்த்தரிடத்தில் காத்திருந்தீர்களா? அவரால் கூடாதது ஒன்றுமில்லை. அவர் வானத்திலும், பூமி யிலும் சகல அதிகாரம் உடையவர். கர்த்தருக்குக் காத்திருப்பீர்களானால், நிச்சயமாய் கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவீர்கள். அந்த நேரத்தில் கர்த்தர் உங்களுக்காக வழக்காடுவார், யுத்தம் செய்வார். யாவற்றையும் செய்து முடிப்பார். ஆகவே, கலங்காமல் கர்த்தரில் திட நம்பிக்கையாயிருங்கள்.
நினைவிற்கு :- "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்" (ஏசா. 51:7).
0 comments:
Post a Comment