“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.”
• (லூக்கா 10:20).
பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் (லூக்கா 10:20). நம் அனைவருக்கும் பரலோகம் செல்ல வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆகையினால் தான் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலிருந்தபோது, “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் மறுபடியும் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3) என்று அவர் கூறினார்.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, (மறைந்த) என் தகப்பனார் Bro.D.G.S.தினகரன் அவர்கள் சுகவீனமாயிருந்தபோது, கடுமையான வலியின் காரணமாக மிகுந்த வேதனைப்பட்டார். அப்போது, தேவனுடைய பெரிதான கிருபையினால் என் தகப்பனார் ஒருநாள் பரலோக தரிசனத்தை கண்டார். பரலோகத்தில் தேவதூதர்கள் பெரிய புத்தகத்தில் எழுதிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். அதைக்கண்ட என் தகப்பனார், நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். இதில் மனிதர்களுடைய பெயர், அவர்களுடைய செயல்கள் மற்றும் பூமியில் அவர்களுடைய இறப்பு பற்றிய தகவல்களை எழுதிக்கொணடிருக்கிறேன் என்று தேவதூதன் பதிலளித்தார். மற்றொரு தேவதூதரிடம் சென்ற என் தகப்பனார், “நான் எப்போது மரித்து பரலோகத்திற்கு வருவேன் என்ற குறிப்புகளை பார்க்க முடியுமா?” என கேட்டார். இதைக்கேட்ட தேவதூதன் என் அப்பாவிடம், ”நீ அநேக ஆண்டுகள் ஜீவனோடிருந்து, கோடிக்கணக்கான ஆத்துமாக்களை தேவராஜ்ஜியத்திற்கு நேராக திருப்புவாய். உன் வேளை இன்னும் வரவில்லை” என்று கூறினார்.
அசாதாரண திறமைகள் கொண்டவர்களுடைய பெயர்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். அதுபோலவே, உங்கள் பெயர்களும், செயல்களும், நீங்கள் கர்த்தருக்கென்று படுகிற பிரயாசங்ளும், கனிகளும் பரலோக கணக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு முன்பதாக நீதியுள்ள வாழ்க்கையை வாழுங்கள். கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவனையே பற்றிக்கொள்ளுங்கள். பொறுமையோடு கர்த்தருக்குக் காத்திருங்கள். இதுவரை உங்களால் கூடாத காரியங்களை, தேவன் சாத்தியமாக்குவார். ஆகவே, தேவனுடைய வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டு ஆசீர்வாதமாய் வாழுங்கள்.
ஜெபம் 🌟🍞🌟
அன்பின் தேவனே,
நான் உமக்கு முன்பாக நீதியுள்ள வாழ்க்கையை வாழ அருள்புரிந்தருளும். உம்முடைய கற்பனைகளை கைக்கொள்ள கிருபை பாராட்டும். என் வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும் நான் உம்முடைய வார்த்தையை பற்றிக்கொள்ளும்படி என்னை வழிநடத்தும். என்னை கைவிடாமல் காத்தருளும். நீர் எப்போதும் என்னோடிருக்கிறபடியால் உமக்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.
0 comments:
Post a Comment