"என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்" (2 கொரி. 12:9).
உங்களுக்கு, கர்த்தரிடத்தில் போதுமான, ஏராளமான கிருபையிருக்கிறது. நீங்கள், பூமியிலே வெற்றியோடு வாழுவதற்கு, கர்த்தரிடம் தாராளமான கிருபையுண்டு. ஒரு மீன் குஞ்சு, நீந்துவதற்கு கடலில் ஏராளமான தண்ணீர் இருக்கிறது. அது, அதின் வாழ்நாளெல்லாம் போதுமானது.
எகிப்திலுள்ள யோசேப்பின் களஞ்சியத்திலே, ஒரு சின்ன சிட்டுக்குருவி குடும்பத்திற்குப் போதுமான தானியங்கள் இருப்பதுபோல, உங்களுக்கும் பரலோகத்திலிருந்து வருகிற கிருபைகள் போதுமானதாயிருக்கிறது. ஆகவே, நீங்கள் கிருபையில் பெருகுங்கள். கிருபையிலே பலப்படுங்கள். காலைதோறும், கர்த்தருடைய கிருபைகள் உங்களை நோக்கி வந்து சேருகின்றன.
ஆகவே, இன்றைக்கு பரலோகத்தைப் பார்த்து சந்தோஷத்தோடு, "அப்பா, என்னிலே எவ்வளவு குறைகளிருந்தாலும், என் வாழ்க்கையில் எவ்வளவு போராட்டங்களிருந்தாலும், அதைச் சந்திக்கவும், மேற்கொள்ளவும், உமது கிருபை போதுமானது. என் கால் சறுக்கும்போது, உம்முடைய கிருபை என்னைத் தாங்கிக் கொள்ளுகிறது," என்று சொல்லுங்கள்.
ஆதி நாட்களிலே, தூய அகஸ்டின் என்ற பக்தன் இருந்தார். அவர் அதிகாலையில் எழும்பி, "அப்பா, எனக்கு கிருபை தாரும். இந்த நாளை வெற்றியோடு நின்று, என் பிரச்சனைகளை சந்திக்க, கிருபை தாரும். என்னுடைய சொல்லிலும், செயலிலும் வழுவாதிருக்க, எனக்கு கிருபை தாரும்" என்று சொல்லி, தேவ கிருபைக்காக அதிகமாய் ஜெபிப்பார்.
பின்பு, தெருக்களிலே அவர் நடந்து போகும்போது, அவருடைய முகத்திலிருக்கிற, கிருபையின் ஐசுவரியத்தை ஜனங்கள் பார்ப்பார்கள். அவர்கள் பாவ உணர் வடைந்து, "ஐயா எங்களுக்கும் கிருபை வேண்டும்," என்று சொல்லி கதறுவார்கள். அவர் வாயினால் ஒரு வார்த்தை பேசாமலிருந்தாலும், அவருடைய முகம் தேவ கிருபையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும்.
அப். பவுலோடு, தேவ கிருபையிருந்ததினாலே, அவருடைய பலவீனத்திலே தேவ பலன் பரிபூரணமாய் விளங்கினது. அந்த பலவீனத்தை எண்ணி சோர்ந்துபோகாதபடி, அதைரியப்படாதபடி, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாதபடி, கிருபை அவரைத் தாங்கினது. ஆகவே, அவர் பலவீனத்தைக்குறித்து எண்ணவில்லை. கிருபையினாலே வருகிற தேவபெலத்தைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார். ஆகவே அவர் எழுதுகிறார், "கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்" (2 கொரி. 12:9).
பொதுவாக, யாரும் தங்கள் பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவதில்லை. பலவீனங்களினால் மனம் சோர்ந்துபோவார்கள். ஆனால். அப். பவுல், பலவீனங்களிலே தனக்கு கிடைக்கும் மகா ஏராளனமான கிருபைகளை எண்ணி எண்ணி கர்த்தரைத் துதித்தார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய பலவீனங்களை ஒருபோதும் எண்ணாதிருங்கள். அதைக் குறித்து சந்தோஷமாய் மேன்மை பாராட்டும்போது, கர்த்தருடைய கிருபைகளை எண்ணி துதிப்பீர்கள். இக்காலத்துப்பாடுகள், இனி உங்களில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகளல்ல.
நினைவிற்கு :- "கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்" (2 கொரி. 12:10).
0 comments:
Post a Comment