“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை’’
• {ஏசாயா 43:2}.
தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் விசேஷித்த பாதுகாப்பு, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கி வரும்பொழுது, அவர்களை பிடிக்கும்படியாக பார்வோனின் படைகள் தொடர்ந்து வருகிறது. எதிரில் செங்கடல் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் இந்த வனாந்திரத்தில் நம்முடைய வாழ்க்கை முடிந்து விடும், பின்னால் பார்வோனின் படைகள். எதிரே கடல். எதாவது ஒன்றினால் மரித்து போவது உறுதி என்று நினைத்து இஸ்ரவேல் மக்கள் பயப்படுகிறார்கள், கலங்குகிறார்கள், கதறி அழுகிறார்கள்.
அப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் “மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்;ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது’’(யாத் 14:21,22)
தேவன் தம்முடைய மக்களுக்காக இராமுழுதும் செயல்பட்டு, செங்கடலை இரண்டாக பிரித்து அதனுடாக வழி நடத்தினார்.
தண்ணீர்கள் பிரிந்து மதில் போல நின்றது, இரண்டு பக்கமும், தண்ணீரை மதிலாக நிற்க வைத்து அதன் நடுவில் எந்த சேதமும் இல்லாமல் பாதுகாப்பாய் நடத்தின தேவன் சொல்லுகிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடுஇருப்பேன்;நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை என்று சொல்லி வாக்கு பண்ணுகிறார்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே, ஒரு வேளை இதே சூழ்நிலையில் நீங்கள் கடந்து வந்து கொண்டிருக்கலாம், எல்லா பக்கமும் நெருக்கப்பட்ட நிலையில் இருக்கிறேனே என்று சோர்ந்து போய் இருக்கிறீர்களா? செங்கடலை இரண்டாக பிரித்த தேவன் உங்களோடு இருக்கிறார்.
எது உங்களுக்கு பிரச்சனையாக உங்கள் எதிரில் இருக்கிறதோ, அவைகளின் நடுவில் எந்த விதமான சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை நடத்தப்போகிறார்.
இன்று அநேகருக்கு பிரச்சனையின் நடுவாக நடந்து செல்ல பயம், ஒரு வேளை அவைகள் நம்மை மூழ்கடித்து விடுமோ, என்ற கலக்கம்.
பிரியமானவர்களே, இரண்டு பக்கமும் தண்ணீர் மதிலைப்போல நிற்க இஸ்ரவேல் மக்கள் அதன் நடுவிலே நடந்து போனார்கள். எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை. தண்ணீர்கள் அவர்கள் மேல் புரளவில்லை. காரணம் செங்கடலை இரண்டாக பிரிந்து நிற்க செய்தவர் சர்வ வல்லமை உள்ள தேவன்.
அன்றைக்கு இஸ்ரவேல் மக்கள் முன்னோக்கி செல்லுவதற்கு தடையாக இருந்தது செங்கடல், எது தடையாக இருந்ததோ அதற்குள்ளாகவே நடந்து செல்லவைத்து, அதன் மூலமாக எந்த பாதிப்பும் வராதபடி பாதுகாப்பவர்தான் நம்முடைய தேவன்.
எனவே, உங்களுக்கு எது பிரச்சனையாக, தடையாக இருக்கிறதோ, அதையே உடைத்து அதன் வழியாகவே கர்த்தர் உங்களை நடத்தி செல்கிறார். தயங்காமல் செல்லுங்கள். தேவனுடைய துணையும், பாதுகாப்பும் உண்டு. தேவனுடைய வார்த்தை அப்படிதான் நமக்கு சொல்லுகிறது. “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்’’.
சிந்திக்க : 🌹🍞🙌🏻
கர்த்தர் கூட இல்லாதவர்கள்தான் பிரச்சனைகளை பார்த்து பயப்பட வேண்டும், அது என்னை மூழ்கடித்து விடுமோ, என்று கலங்க வேண்டும். ஆனால் தேவாதி தேவன் நம்மோடு இருக்க நமக்கு ஏன் கலக்கம். நாம் ஏன் பயப்பட வேண்டும்.? தயங்காமல் முன்னோக்கி செல்லுங்கள். கர்த்தருடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழி நடத்தும். ஆமென்.
0 comments:
Post a Comment