அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை... .
• (மாற்கு 11:13).
பெரிய கடை ஒன்று நடத்துகின்ற ஒருவர் நல்ல தோற்றத்தோடு, கம்பீரமாக இருப்பார். ஆனால் அவரால் பத்து அடிகள் நடக்க இயலாது. ஒரு சிறுவன் செய்கின்ற வேலையைக்கூட அவரால் செய்ய இயலாது. வாகனத்திலே வருவார், வாகனத்திலே போவார், அனைத்து வேலைகளையும் பிறரைக் கொண்டே செய்வார். நல்ல ஒரு சரீர அமைப்பு இருந்தும் எதையும் செய்ய இயலாத ஒரு சரீரம். காலம் முழுவதும் உட்கார்ந்து வியாபாரம் செய்ததால் சரீரத்திற்கு எந்தப் பயிற்சியும் இல்லாமல் போனது.
சிலருடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலையும் இப்படித்தான். வலிமையான ஒரு ஆவிக்குரிய தோற்றம் இருக்கும். ஆனால் ஆவிக்குரிய எந்த வல்லமையும் அவர்களிடம் செயல்படாது. அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையால் ஆவிக்கேற்ற எந்த விளைபலனும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கை இல்லை. சிலர் ஜெபம், வேதவாசிப்பு, ஆராதனை, காணிக்கை, ஊழியம் என ஏராளமான ஆவிக்குரிய செயல்பாடுகளுடன் தங்களை இணைத்து வலிமையான ஒரு ஆவிக்குரிய தோற்றத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அந்தத் தோற்றத்தினால் உண்மையான கனிகொடுக்கும் அனுபவத்தை அவர்கள் காணவில்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு அத்திமரத்தை ஒருமுறை சபித்தார். அது மிகச் சிறப்பான தோற்றத்தைக் கொண்டிருந்தபோதிலும், கனிகளை உருவாக்கும் ஆரோக்கியத்தன்மை அதற்கு இல்லை. அது கவனத்தைக் கவரும் காட்சி மரமாக இருந்தும், கனியற்ற மரமாக இருந்தது. நம்முடைய பலவிதமான பக்தியான செயல்கள் நமக்கு நல்ல ஒரு மனதிருப்தியையும், ஆன்மீகமாக வாழுகின்ற ஒரு எண்ணத்தையும் கொடுக்க முடியும். ஆனாலும் அவைகளால் கர்த்தர் எதிர்பார்க்கும் அன்பு, தாழ்மை, அடக்கம், பொறுமை, சாந்தம், இரக்கம் போன்ற பண்புகளை உருவாக்க முடியாது. நம்முடைய பக்தியான வாழ்க்கை நம்மை பண்பட்ட மக்களாகவும் குணநிலையில் சிறந்தவர்களாகவும் மாற்றியிருக்கிறதா என்பதே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி.
உண்மையான மனந்திரும்புதல், அர்ப்பணிப்பு, ஆரோக்கியமான உபதேச அறிவு, சரியான விசுவாசம், தேவ உறவின் நிச்சயம், தேவ ஐக்கிய வாஞ்சை போன்றவற்றோடு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை இணைந்தால்தான் நாம் ஆரோக்கியமடைந்து, ஆண்டவர் விரும்புகின்ற ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியும். இருதயத்தை தேவனோடு இணைத்துப் பார்க்காமல் பக்தியான சில காரியங்களை மட்டும் மதக்கடமை போல தொடர்ந்து செய்தால், பெரிய ஆன்மிகவாதி என்ற பெயரை நாம் பெறலாம். ஆனாலும் அது கனிகளற்றதாகவே தொடரும். ஆரோக்கியமான உபதேசங்கள் சார்ந்த ஒரு ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கையைத் தேடுவோம்.
இன்றைய சிந்தனைக்கு :
வாசனைத்திரவியம் பூசியிருப்பதை சொல்லி தெரிவிக்கத் தேவையில்லை. இறைவன் உன்னோடிருக்கும் விஷயமும் அப்படியே.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். ஆமென்.
0 comments:
Post a Comment