"வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்"
• (யாத்திராகமம். 23:20).
இன்றைக்கு, இந்த வாக்குத்தத்தத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிறார். முதலாவது, "வழியிலே உன்னைக் காப்பேன்," இரண்டாவது, "நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்திற்கு உன்னைக் கொண்டு போய் சேர்ப்பேன்," மூன்றாவது, "இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்" என்று, அன்புள்ள தேவன் உங்களுக்கு ஒரு உறுதிமொழியைக் கொடுக்கிறார். அதை உறுதியாய்ப் பிடித்துக் கொண்டு, வாக்குத்தத்தங்கள் நிறைவேற ஜெபியுங்கள்.
இந்தக் காலம், நாம் பிரயாணம் பண்ணுகிற காலம். நம் பிள்ளைகள், தூர இடங்களுக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். ஆகவே, பயணத்தைக் குறித்து பயப் படாமல், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். நாங்கள் பயணங்களை மேற்கோள்ளும்போது, எங்கள் தகப்பனார் அடிக்கடி, நீதிமொழிகள் 3:6-ஐ ஞாபகப்படுத்துவதுண்டு.
"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (நீதி. 3:6). இந்த ஜெபத்தோடு, கர்த்தரை நினைத்துக்கொண்டு பயணம் செய்யும்போது, பயணம் இனிதாயிருக்கும். கர்த்தரும் கூட வருவார். சுகபத்திரமாய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்.
91-ம் சங்கீதம், ஒரு பாதுகாப்பின் சங்கீதம். அங்கே, மீண்டும் கர்த்தர் தம்முடைய தூதனைக் குறித்து ஞாபகப்படுத்துகிறார். "உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்" (சங். 91:11,12). இந்த சங்கீதம் முழுவதையும் வாசித்து, கர்த்தருடைய காக்கும் கிருபைக்காக அவரைத் துதியுங்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தைவிட்டு கானானை நோக்கி பயணம் செய்யும் போது, அவர்களுக்கு முன்பாக நடந்த, தேவதூதனானவரை கண்ணாரக் கண்டார் கள். அவர்களை விரட்டிக்கொண்டு, துரத்திக்கொண்டு, நிர்மூலமாக்க வேண்டு மென்ற எண்ணத்தோடு எகிப்தியர் வந்தபோது, இஸ்ரவேலரின் சேனைக்கு முன்பாக நடந்த, தேவதூதனானவர் விலகி, அவர்களுக்கு முன்னிருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது (யாத். 14:19). பயணத்தில் எந்த குறுக்கீடும் ஏற்படவில்லை. உயிர்ச்சேதங்களும் இல்லை.
உங்களுடைய பயணத்திலே, கள்ளர்களோ, விபத்துக்களோ, நாசமோசங்களோ, தீய ஜந்துக்களோ, உங்களை அணுகாதபடிக்கு கர்த்தர் உங்களை நடத்திக்கொண்டு போவார். ஆகவே, பயணத்தில் நீங்கள் பதற வேண்டியதில்லை. கவலைப்பட்டு கலங்க வேண்டியதுமில்லை.
ஒன்றை மாத்திரம் எண்ணிக்கொள்ளுங்கள். தேவ சித்தத்தின்படி நீங்கள் செல்லுகிறீர்களா? அல்லது கர்த்தர் குறிப்பிட்ட பாதையில் செல்லுகிறீர்களா? என்பவற்றை, நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். யோனாவைப் போல வழிவிலகி, தர்ஷீசுக்குப் போக வேண்டாம். கள்ளர் கையில் விழுந்த, வழிப்போக்கனைப்போல எருசலேமை விட்டு, எரிகோவுக்கு செல்ல வேண்டாம். நகோமியைப்போல, பெத்லகேமை விட்டு மோவாபுக்கு செல்ல வேண்டாம். கர்த்தருடைய சித்தத்தின் மையத்தில் நல்ல பாதுகாப்பும், சமாதானமுமுண்டு.
நினைவிற்கு : ✝📖✝
"அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்"
• (ஏசாயா. 63:9).
0 comments:
Post a Comment