தேவனுக்காக உண்மையும் உத்தமுமாய் இயேசு வருவருக்காக மட்டும் வாழ்ந்து தன்னில் எந்த பாவமும் இல்லாமல் பூரண பரிசுத்தத்தை அடைந்து இயேசுவின் இரகசிய வருகையில் சேர்ந்து கொண்டவர்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள்:
ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றிலும் பரிசுத்தமாக்கப்பட்டு பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அடையும் பிரதிபலன்கள் : (6 விதமான பிரதிபலன்கள்)
1. கிறிஸ்துவாகிய மணவாளனை ஆதாயப்படுத்திக் கொள்வார்கள் :
"அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்.", பிலிப்பியர்.3:8,9.
"நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்." 2கொரிந்தியர்.11:2.
"கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்." எபேசியர் 5:27.
"அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, பூரண பரிசுத்தமடைந்த பரிசுத்தவான்கள் இரகசிய வருகையில் தங்கள்" மணவாளனாகிய" கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்வார்கள். (பிலிப்பியர்.3:8,9; 2 கொரிந்தியர்.11:2) ஏனெனில் கர்த்தராகிய இயேசு தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அதாவது கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான(எபேசியர்.5:27) ஒரு மணவாட்டியை தனக்கென்று ஆதாயப்படுத்திக் கொள்ளும் சந்தோஷத்தின்பொருட்டு, எல்லாவற்றையும் சகித்தது போல, அவர்களும் எல்லாவற்றையும் சந்தோஷமாக சகித்தார்கள்.
2. கிறிஸ்துவினுடைய சர்வத்துக்கும் சுதந்திரவாளியாவார்கள் :
"நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ரோமர் 8:17.
"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான், நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.",வெளி 21:7.
அன்பின் தேவனுடைய பரிசுத்த ஜனமே, பூரண பரிசுத்தமடைந்து கர்த்தருடைய இரகசிய வருகையில் அவரோடு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள், அவரை ஆதாயப்படுத்துவதின் மூலம் சர்வத்துக்கும் சுதந்திரவாளியாகிய மணவாளன் கிறிஸ்து இயேசுவுடையதெல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்கிறார்கள்.
3. பூரணமடைந்த பரிசுத்தவான்களுடைய சரீரம் தேவ மகிமையையும் பூரணத்தையும் அடைந்ததாய் இருக்கும்:
"பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்." 1யோவான் 3:2.
"பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்." எபேசியர் 1:5,6.
"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி." ரோமர் 3:23.
"இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." வெளி 22:12.
அன்பான கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைகளே, பூரண பரிசுத்தத்தை அடைந்து கொண்ட பரிசுத்தவான்கள் கர்த்தருடைய இரகசிய வருகையில் தேவசாயலையும், தேவ மகிமையையும் அடைந்து கொள்வார்கள். "அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்." (1யோவான் 3:2) மனுஷனுக்கு ஒரு சரீரத்தைச் சிருஷ்டித்ததின் நோக்கம் அவருடைய கிருபையின் மகிமையின் புகழ்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும்படியாகவே ஆகும். (எபேசியர். 1:5) ஆனால் அவனை இந்த மகிமையை இழக்கச் செய்தது பாவமாகும். (ரோமர். 3:23) என்றாலும் பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தாங்கள் கர்த்தருக்காக பட்ட பிரயாசங்களுக்கேற்ற மகிமையடைவார்கள். (வெளி.22:12) என்று சத்தியம் நமக்குப் போதிக்கிறது.
4. பூரண பரிசுத்தமடைந்த பரிசுத்தவான்கள் கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வார்கள் :
"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்." வெளி 3:21
"எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக," எபேசியர் 1:20.
"எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்." எபேசியர் 1:23.
அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, அவர்கள் அவருடைய சிங்காசனத்தின் வல்லமையையும், அதிகாரத்தையும் பகிர்ந்து கொண்டு கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வார்கள். (வெளி.3:21) கிருபையின் காலத்திலுள்ள சபையின் மகிமைப்படுத்தப்பட்ட இப்பரிசுத்தவான்களின் அதிகாரம், வழி காட்டிதல் ஆகியவற்றின் கீழ் தூதர்களும் மற்ற கால நியமங்களில் ஜீவித்த பரிசுத்தவான்களும் இருப்பார்கள்.
அன்பினாலும் தாழ்மையினாலும் தங்கள் சித்ததைத் தேவனுக்கு கீழ்ப்படிந்து ஒப்புக் கொடுத்தலின் மூலமாயும், தங்களை நேசித்த கிறிஸ்துவின் வல்லமையின் மூலமாயும், தங்களுடைய எல்லா நெருக்கங்களிலும் சோதனைகளிலும் அவர்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறார்கள். ஆகவே, அவரோடு கூட ஆளுகை செய்ய அவர்கள் பாத்திரவான்களாகக் காணப்படுகின்றனர். "அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். " (2தீமோத்தேயு 2:12) என்று கர்த்தருடைய ஆவியானவர் திருவுளம் பற்றுகிறார்.
5. பூரண பரிசுத்தமடைந்த பரிசுத்தவான்கள் நித்தியத்தைச் சுதந்தரித்துக் கொள்கிறார்கள்:
"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்." யோவான் 14:2.
"நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." யோவான் 14:3.
அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, பூரண பரிசுத்தத்தை அடைந்த பரிசுத்தவான்களாகிய மகிமையடைந்தவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறபடியால், தங்கள் நித்திய வீடு அல்லது வாசஸ்தலமாகிய புதிய எருசலேமைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இதைத்தான் கர்த்தராகிய இயேசு அவர்களுக்காக ஒரு ஸ்தலத்தை "உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்" நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." (யோவான் 14:2.3) என்று கூறினார்.
6. பூரண பரிசுத்தமடைந்த பரிசுத்தவான்கள் சீயோனை சுதந்தரித்துக் கொள்கிறார்கள் :
"ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே, கற்புள்ளவர்கள் இவர்களே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே, இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்." வெளி 14:4.
"இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்." வெளி 14:5.
அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, சீயோன் என்பது திரித்துவ தேவனின் ஆதி உன்னதமானதும் மிகவும் மகிமை பொருந்தினதுமான வாசஸ்தலமாகும். தங்களை தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்துக் கொண்ட பூரண மணவாட்டியானவளுக்கு இது பகிர்ந்தளிக்கப்படுகிறது. "ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே... ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே... இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்." (வெளி 14:5).
மோசே சீனாய் மலையிலிருந்து தன் கைகளில் இரண்டு சாட்சி பலகைகளுடன் இறங்கி வந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் அவன் கிட்டச் சேருவதற்குப் பயப்படும் அளவுக்கு அவன் முகம் பிரகாசித்தது. அவன் தன் முகத்திற்கு முக்காடிட்டுக் கொண்டாலொழிய அவர்கள் அவனை நோக்கிப் பார்க்க முடியாத அளவுக்கு அவன் முகம் தேவ மகிமையால் பிரகாசித்தது. இதைப் போலவே, சீயோனில் வாசஞ்செய்யும் தங்களை தேவனுக்கென்று மணவாட்டியாய் பிரதிஷ்டை பண்ணிக் கொண்ட பூரண பரிசுத்த மகிமையடைந்த பரிசுத்தவான்கள் சீயோனில் உண்மையான மகிமையை அல்லது திரித்துவ மகிமையை நேரடியாகக் காண, தாங்கமுடியாத அளவிற்கு அதன் மகிமை அவ்வளவு மகத்துவமுள்ளதாயிருக்கும்.
"பரலோகத்தில் பிதாவையும் குமாரனையும் காண்பது சாத்தியமானதா என்றால் சாத்தியமானதே. ஏனென்றால் பிதாவாகிய தேவனும் குமாரனுமே புதிய எருசலேமுக்கு வெளிச்சமாயிருக்கிறார்கள் என சத்தியம் நமக்குப் போதிக்கிறது." "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை, தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு." வெளி 21:23 என்று வாசிக்கிறோம். "இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்தவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்." எபிரேயர் 1:3.
பரலோகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பரிசுத்தவான்களின் ஆவிக்குரிய நிலவரம் அல்லது அவர்கள் அடைந்துள்ள தகுதிக்கு ஏற்றவாறு, அவர்கள் யாவரும் காணத்தக்க விதத்தில் தங்கள் மகிமையைப் பல அளவில் குறைத்துக் கொள்ளும் சக்தி பிதாவுக்கும் குமாரனுக்கும் உண்டு. தேவனுடைய "மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்த கர்த்தராகிய இயேசு, தாம் பூமியில் வாழ்ந்தபோது தம்மைத்தாமே யாவருக்கும் வெளிப்படுத்தினார்." "அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?" (யோவான் 14:9) என்று நம் அருமை இரட்சகர் கூறுகிறார். ஆனால் பூரண பரிசுத்த மகிமையை அடையாதவர்கள் பிதாவையோ குமாரனையோ அவர்களுடைய சர்வ மகிமையையோ காண முடியாது.
0 comments:
Post a Comment