“கேடகமானவர்!”.
"ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்" ( ஆதியாகமம். 15:1).
கர்த்தர் உங்களுக்கு கேடகமாயிருப்பார். எந்த தீய மனிதரும், உங்களை அணுகவே முடியாது. கர்த்தர், எல்லா சூனியங்களையும், செய்வினைகளையும், அதமாக்கி, உங்களுக்கு கேடகமாயிருப்பார். உங்களைத் தொடுகிறவன், அவருடைய கண்மணியை தொடுகிறான். "அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக் கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்" (சங். 91:3).
"கேடகம்" என்று சொல்லுவது, "யுத்த ஆயுதங்களில்" ஒன்றாகும். இரண்டு வித ஆயுதங்களுண்டு. ஒன்று, "எதிரியை தாக்குகிற ஆயுதங்கள்." இரண்டாவது, "பாதுகாக்கிற ஆயுதங்கள்." ஈட்டி, வாள், அம்பு போன்றவைகள், சத்துருக்களை தாக்கி, அழிக்கக்கூடிய ஆயுதங்கள். அதே நேரம், கேடகம், தலைச்சீரா போன்றவை ஒருவனை பாதுகாக்கக்கூடிய ஆயுதங்களாகும். இன்னும் அரைக்கச்சை, பாதரட்சை போன்ற, சர்வாயுத வர்க்கங்களுமுண்டு.
இன்று, கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த அதே வாக்குத்தத்தத்தை, ஆபிரகாமின் சந்ததியாகிய நாமும் சுதந்தரித்துக்கொள்வோமா? கர்த்தர், ஆபிரகாமை தெரிந்து கொண்டு, தன்னுடைய சிநேகிதனாக்கி, பாலும், தேனும் ஓடுகிற கானானை சுதந்தரமாய் கொடுப்பதாக வாக்களித்தார். ஆபிரகாம் கானானை நோக்கிப் புறப்பட்டபோது, லோத்தும்கூட, ஆபிரகாமின் தரிசனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, புறப்பட்டு விட்டார். ஆனால், பாதிவழியில் லோத்து, சோதோமின் நீர் வளம் அவரை கவர்ச்சிக்கவே, கானானின் தரிசனத்தை விட்டுவிட்டு, சோதோம் கொமோராவிலே தங்கிவிட்டார்.
சிலகாலம் சென்றன. திடீரென்று, நான்கு எதிரிகளான ராஜாக்கள், சோதோம் கொமோரா மேலே படையெடுத்து வந்து, லோத்துவையும், அவரது குடும்பத்தாரையும் சிறைப்படுத்திக் கொண்டுபோய்விட்டார்கள். ஆபிரகாம் அதைக் கேள்விப்பட்ட போது, தன்னுடைய வீட்டிலிருந்த, முந்நூற்றுப் பதினெட்டு பேருக்கும், ஆயுதம் தரிப்பித்து, வெற்றிபெற்றுபோன, நான்கு ராஜாக்களையும் பின்தொடர்ந்து போய், அவர்களை முறியடித்து, லோத்துவையும், குடும்பத்தாரையும் சிறை மீட்டார்.
ஆபிரகாம், யுத்த வீரனல்ல. ஆடுகளை மேய்க்கிற மேய்ப்பன். லோத்துவின் மேலுள்ள அன்பினால், தன் உறவினன் என்ற வைராக்கியத்தினால், யுத்தத்துக்கு சென்று, நான்கு ராஜாக்களோடு போரிட்டு, லோத்தை சிறைமீட்டுக் கொண்டு வந்தாரே தவிர, போதுமான பாதுகாப்பு ஆயுதங்கள் அவரிடம் இருந்ததில்லை. அவருக்கு விரோதமாய் ஒரு யுத்தமுண்டானால் என்ன செய்வது?
கர்த்தர் இரண்டு காரியங்களைச் செய்தார். முதலாவது, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்குக்கு, ஆபிராம் அப்பமும், திராட்சரசமும் கொண்டு வந்தார் (ஆதி. 14:18). அது புதிய ஏற்பாட்டில், இயேசுவின் சரீரத்துக்கும், அவருடைய இரத்தத்துக்கும் அடையாளமாயிருக்கிறது. தேவாதி தேவன், எனக்குள் வாசம் செய்கிறார் என்ற, பெரிய பாதுகாப்பை அது கொடுக்கிறது.
இரண்டாவதாக, "ஆபிராமே, நீ பயப்படாதே நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்" (ஆதி. 15:1). கர்த்தர் உங்களுக்கு கேடகமாயிருப்பாரென்றால், சோதனைகள், அவரை சந்தித்துவிட்டுதான் உங்களை தொட முடியும். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு கேடகமாயிருக்கிறபடியால், பொல்லாப்பு உங்களுக்கு நேரிடாது. வாதை உங்கள் கூடாரத்தை அணுகாது.
நினைவிற்கு :
"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர். 4:13).
0 comments:
Post a Comment