லேசான காரியம்!
‘கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும், உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும். உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்.
கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும்" என்றான்.
(2 நாளாகமம்.14:11)
இக்காலங்கள் மிகவும் கொடியதும், நாட்கள் பொல்லாதவைகளுமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எல்லாப் பக்கங்களிலும் சொல்ல முடியாத போராட்டங்களோடு மக்கள் வாழ்ந்து வருவதுதான் இந்நாட்களின் நிலைமையாகும். இச்சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
மனுஷனை நம்புவதை கர்த்தர் ஒருநாளும் விரும்புகிறவரல்ல.
ஆசா என்ற ராஜாவுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா என்பவன் பெரிய மாபெரும் சேனையோடு யுத்தம் பண்ண எதிரிட்டு வந்தபோது, ராஜாவாகிய ஆசா செய்த முதல் காரியம் ‘ஜெபம்’ ஆகும்.
இரண்டாவதாக, தன் ஜெபத்தில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை வாசித்துப் பார்க்கும்போது தன்னுடைய பெலத்தை நம்பாமல் கர்த்தருடைய பெலனை முற்றிலும் சார்ந்து கொள்கிறவன் என்பதைக் காண முடியும்.
இதுதான் கர்த்தருடைய பிள்ளைக்கும், உலகப் பிரகாரமானவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
ஆம், உங்கள் வாழ்விலும் ஏதாகிலும் போராட்டத்தின் வழியாகக் கடந்து வந்து கொண்டிருக்கிற இந்நாட்களில், ஆசா ராஜா ஒரு முன்மாதிரியாகும்.
சிலர் கர்த்தருடைய பெலனையும், அவர்களுடைய சுயபெலனையும் வைத்துக் கொண்டு போராடுவார்கள். அது முற்றிலும் தோல்வியில்தான் முடிகிறது.
யாருக்கும் உதவிகள் செய்வது ஆண்டவருக்கு லேசான (சாதாரண) காரியமே... பெலனில்லாத மனிதருக்கு மட்டுமல்ல, பலமுள்ளவருக்கும் கூட கர்த்தரின் உதவி தேவைப்படும். ஏனெனில் வெற்றி என்பது பலம் சார்ந்த விஷயம் அல்ல. அது புத்தி, ஞானம் சார்ந்த விஷயம். ஆச்சரியமான வெற்றிக்கு தேவகிருபையும் முக்கியம்.
கோலியாத் எனும் இராட்சதனை வெல்ல, தாவீது தன் பலத்தை நம்பியிருக்கவில்லை. வாலிபன் தாவீது பலமுள்ளவரா எனக் கேட்கலாம். ஆம், முன்னமே அவர் ஒரு சிங்கத்தை, ஒரு கரடியை அடித்துக் கொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர். அந்தக் கவண் கல்லைப் பயன்படுத்தும்போது, விருத்தசேதனம் எனும் உடன்படிக்கையை அறிக்கையிட்டே விசுவாசத்தோடு வென்றார். அந்தப் பெலிஸ்தன் விருத்தசேதனமற்றவன் என்பதே, அவன் பலவீனன் என்று அறிவித்ததாக தாவீது எடுத்துக்கொண்டார்!
சிம்சோன் பலம்பொருந்திய மனிதனாய் இருந்தும், தோற்றுப்போனதற்கும், கண்கள் இழந்து, கோமாளி போல ஆனதற்கும் காரணம், கர்த்தருடைய உடன்படிக்கையில் நிலைநிற்காமையே! இச்சையும், வழிவிலகலும் வெற்றியை விட்டு தள்ளிச்செல்ல வைத்துவிட்டது. கிருபையை விட்டு அவராகவே விலகிவந்ததால், தோல்வியே மிஞ்சியது.
இஸ்ரவேலர் தோல்விக்கு நேராகச் செல்லும்போதெல்லாம், கர்த்தர் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தே, ஜெயத்தைப் பரிசளித்தார்.
"கர்த்தர் நம்மோடு ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையில் நிலைத்திருப்பதும், அதனை அறிக்கையிடுவதும் எத்தனை பலம் நமக்கு!" அதுவே வெற்றிக்கான வழி!
உங்கள் போராட்டம் எதற்கு நேராக இருந்தாலும், எதிராளியையோ, அவர்களது பலத்தையோ பார்க்காமல், உடன்படிக்கையால் பலப்படுத்தும் கர்த்தரை மட்டும் பார்த்தால், கிருபை நம்மை பலப்படுத்தும். பிறகு ஜெயமே அனைத்திலும். நம்மைப் பலப்படுத்தி, வெற்றியை அருளுவது, அவருக்கு லேசான காரியம். தேவனால் கூடாதது ஒன்றுமில்லை! ஆமென்! உங்கள் போராட்டங்களிலிருந்து மாபெரும் வெற்றியைக் காண்பது நிச்சயம்.
0 comments:
Post a Comment