நோட்டீஸ் அடிக்கச் சொல்லும் போதே, ஹாலிவுட் பட ஸ்டைலில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மற்ற ஊழியர்களின் படங்கள் தன் படத்துக்கு கீழே வர வேண்டும் என்கிறார்கள். வேறு யாரும் பிரபலம் அடைந்து விட கூடாது என்று எண்ணுகிறார்கள்.
தாடி மீசைகளை அடிக்கடி அழகுபடுத்திக் கொள்கிறார்கள். தனிப்பட்ட ஒப்பனைக் கலைஞர்களும் ஊழியத்தில் உண்டு! தங்களுக்கே தெரியாமல் அழகை ஆராதிக்கிறார்கள்.
விசுவாசிகளை உருவாக்கத் தவறி, ரசிகர் ரசிகைகளை உருவாக்குகிறார்கள். ஆடைகள் ஆடம்பர நிர்வாணம் தெளிக்கின்றன!
இசை தாலந்துகளையும் நடன தாலந்துகளையும் தாராளமாக தந்து, மக்களை ஒரு "ஆவிக்குரிய மயக்கத்தில்" வைத்திருந்து, மெய்வார்த்தையை விட்டு, மெய்வாழ்வாகிய பரலோக பாதைக்கு அழகாய் தவிர்க்க வைக்கிறார்கள்.
இதையே கண்டும் கேட்டும், கேட்டின் மகன்களாக ஆக்கப்பட்ட எம் வாலிபர்கூட்டம், சிகை அலங்காரத்தில், நவீன ஆடைகளில், வலம் வருகிறது! முன் நிற்கும் ஊழியன் முன்மாதிரியாக இல்லையே!
ஆசீர்வாத மயக்கத்தில், பிரபல மயக்கத்தில், ஆவிக்குரிய தெளிவு மங்கிப் போய் கிடக்கிறது. பவுலும் பேதுருவும் பட்ட பாடுகள் மறைக்கப்பட்டு, தாவீதும் மிரியாமும் செய்த ஊழியங்கள் மறைக்கப்பட்டு, தங்களுடைய இச்சைக்கு ஏற்ற காரியங்களை மட்டும் வேதத்திலிருந்து சுரண்டி எடுத்துக் கொள்கிறார்கள். பணமே மனம் மாற்றுகிறது! பாவமன்னிப்பு ஓர் "?" ஜாதியே மணம் வீசுகிறது! பரலோக நற்கந்தங்கள் எங்கே?
இந்தப் பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைக்கும் தேமாக்கள் உருவாக்கப்பட்டு, பரலோக வாஞ்சையுள்ள தோமாக்கள் நசுக்கப்படுகிறார்கள்!
மேடைதோறும் தவறாமல் சொல்லப்படும் எழுப்புதல், மேடைக்குக் கீழே இறங்கமறுக்கிறது!
சிலுவையில் சின்னாபின்னமாக கிறிஸ்துவை விட்டுவிட்டு, அழகான ஆசீர்வதிக்கும் ஆண்டவர் காட்டப்பட்டு, இன்னும் காயப்படுத்தப்படுகிறார் மீட்பர் இயேசு!
மெய்யான தேவகுமாரனோ, இரத்தம் வழிய இன்னும் தான் இழந்ததை தேடிக்கொண்டிருக்கிறார். நவீன ஊழியர்களோ, காணாமல் போனவர்களை, இன்னும் தொலைதூரத்துக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஐயோ, சத்தியத்தை அறிந்த மனது குத்தப்படுகிறது; கிழிக்கப்படுகிறது! இருதயத்தின் நிறைவினால், வாய் தனக்கு தானே பேசுகிறது.... ஆண்டவரே காப்பாற்றும்!!!
0 comments:
Post a Comment