கழுதையின் வருத்தமும் சிலுவையின் திருத்தமும்
இயேசுவைச் சுமந்த என்னைவிட
இயேசுவைக் கொன்ற உன்னை
புனிதமாக்கிவிட்டார்களே
என்று வருத்தப்பட்டது கழுதை
அதற்கு சிலுவை சொன்னது
அவருக்குக் கிடைத்த
வஸ்திர விரிப்பு
உனக்கும் கிடைத்தது
அவருக்குக் கிடைத்த
முதன்மையான இடம்
உனக்கும் கிடைத்தது
அவருக்குக் கிடைத்த
மதிப்பு, மரியாதை
உனக்கும் கிடைத்தது
ஆனால் நான்
என்னைச் சுமந்தவரை
நானும் சுமந்தேன்
அவர் விழும்போது
நானும் கீழே விழுந்தேன்
அவரை அடித்தபோது
என்மீதும் விழுந்தது
அவரில் ஆணிதுளைத்தபோது
என்னிலும் துளைத்தது
ஒதுக்கப்பட்டவனாய
ஓரத்தில் கிடந்ததேன்
செதுக்கப்பட்டவனாய்
சிகரத்தில் நின்றேன்
அதனால்தான்
வெறுக்கப்பட்ட நான்
விரும்பப்படலானேன்
புறக்கணிக்கப்பட்ட நான்
புனிதமானேன்
சபிக்கப்பட்ட நான்
சரித்திரமானேன்
என்று திருத்தியது சிலுவை
தான் சொன்னதைக்குறித்து
வருத்தப்பட்டு
மன்னிக்கணும் சிலுவையே
பாடல்களை நான் சுகித்தேன்
பாடுகளையோ நீ சகித்தாய்
ஆரவாரங்களை நான் சுகித்தேன்
பாரங்களையோ நீ சகித்தாய்
அதற்கு சிலுவை
வருத்தப்படாதே கழுதையே
நாம் இருவருமே
இயேசுவைச் சுமந்ததினால்
பாக்கியம் பெற்றவர்கள்.
இயேசுவுக்கே
மகிமை உண்டாகட்டும்
0 comments:
Post a Comment