ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். - (ரோமர்14:12).
செல்வந்தனான ஒரு மனிதன் ஒரு பெரிய இசை குழுவில் சேர்ந்து இசைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுக்கு இசை வாசிக்க ஒன்றும் தெரியாது. அதைக் கற்றுக் கொள்ளவும் அவன் வாஞ்சிக்கவில்லை. ஆனால் அரசனின் முன்பு குழுவோடு சேர்ந்து வாசிக்க வேண்டும் என்று பணத்தைக் கொடுத்து சேர்ந்துக் கொண்டான்.
அதன்படி அந்தக் குழுவை நடத்துபவர், கைகளில் செய்யும் விதத்தைப் பார்த்து ஏதோ வாசிப்பதுப் போல கும்பலோடு கும்பலாக சேர்ந்து வாசித்து வந்தான். அல்லது வாசிப்பதுப் போல நடித்து வந்தான். இப்படி இரண்டு வருடங்கள் ஓடியது.
அந்த குழுவிற்கு தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் தன் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் தன் முன்பு தனித்தனியாக வாசிக்க வேண்டும், ஒவ்வொருவரும் எத்தகைய தாலந்து உள்ளவர்கள் என்றுப் பார்க்க வேண்டும் என்று அறிய வேண்டும் என்று சொல்லி, ஒவ்வொருவரையாக அழைத்து வாசிக்க சொன்னார்.
இந்த மனிதனுக்கு பயம் ஏற்பட்டது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சாக்கு சொல்ல ஆரம்பித்தான். நடத்துனரோ, மருத்துவரை அழைத்து அந்த மனிதனை சோதிக்க சொன்னார். மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு. அந்த மனிதனுக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு போனார். நடத்துனர் அந்த மனிதனை வாசிக்க சொல்லி பணித்தார். அப்பொழுதான் அந்த மனிதன் தான் ஒரு போலி என்று வெட்கத்தோடு ஒத்துக் கொண்டான்.
பிரியமானவர்களே, நம்மில் சிலரும் ஆலயத்திற்கு ஒழுங்காக செல்லலாம், வேதத்தை வாசிக்கலாம், சபையில் நடக்கும் அத்தனை கூட்டங்களுக்கும் செல்லலாம், ஆனால் இருதயமும், மனமும் மாறாவிட்டால் அதினால் பிரயோஜனமில்லை. வெளிப்புறமாக நாம் பரிசுத்தவான்கள், பரிசுத்தவாட்டிகள், ஆனால் இருதயத்திலோ பாவமும், அசுத்தமும், பொறாமையும், இச்சையும், பெருமையும் நிறைந்து காணப்பட்டால் நம்முடைய வெளிப்புற பரிசுத்தம் வீணானதாயிருக்கும்.
இந்த உலகத்தின் முன்பாக நாம் நம்மை பரிசுத்தமாக காட்டிக் கொள்ளலாம், ஆனால் 'நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்' என்ற வார்த்தையின்படி தனித்தனியாக கிறிஸ்துவுக்கு முன்பாக நாம் நிற்கும்போது, ஒருவேளை வெட்கப்பட்டு போகலாம்.
நாம் இந்த உலகத்தையும், மாம்சத்தையும் ஜெயிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் முன்னேறி வரும்படி தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள். சத்துரு நம்மை ஒருநாளும் ஜெயிக்க முடியாது. ஆனால் நாம் நம் இருதயத்திலும், சிந்தையிலும் அவனுக்கு இடம் கொடுக்கும்போது, நாம் அவனிடம் தோற்றுப் போகிறோம்.
'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்' (ரோமர் 12:2) என்ற வார்த்தையின்படி, இந்த உலகத்திற்கு உரிய பக்தியின் வேஷத்தை நாம் தரிக்காமல், ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வேதத்தின்படி கீழ்ப்படிந்து நம்முடைய மனம் புதிதாக மாற்றப்பட்டு, மறுரூபமாகி, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவோம். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கர்த்தரோடு யுகாயுகமாய் நாம் வாழும்படி தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாவோமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென்! மாரநாதா!
மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம் முக சாயலாய் உரு மாற்றும் தெய்வமே
இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா
ஜெபம் ✝📖✝
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களில் ஒருவரும் போலி கிறிஸ்தவர்களாக இல்லாமல், எங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகும்படிஉம்மிலே வளர கிருபை செய்யும். கணக்கொப்புவிக்கிற நாளிலே வெட்கப்பட்டு போகாதபடி, பரிசுத்தமாய் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்பட கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
0 comments:
Post a Comment